அரிய வகை கருஞ்சிறுத்தை உயிரிழப்பு! பிரேத பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

by

ஹட்டன் – நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் மீட்கப்பட்டு, உயிரிழந்த கருஞ்சிறுத்தையின் பிரேத பரிசோதனையை பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருஞ்சிறுத்தை கடந்த 26ம் திகதி நல்லதண்ணி, வாழைமலை தோட்டத்தில் விவசாயப் பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 27ம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டார். கருஞ்சிறுத்தை மீட்கப்பட்ட விவசாயப் பண்ணையின் உரிமையாளரே கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த இந்த சிறுத்தை அருகிவரும் விலங்கினங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.