பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கால எல்லையை நீடிக்கவும் - இம்ரான் கோரிக்கை

by

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப கால எல்லையை நீடிக்குக்குமாறு முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர், கல்வி அமைச்சர் மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கு அண்மையில் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடித்ததில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2019 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப படிவத்தினை பாடசாலை ஆரம்பித்து இரண்டு வாரங்களின் பின் சமர்ப்பித்தால் போதுமானது என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தற்போது ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைத்தல் வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இது ஒரு முன்னுக்குப்பின் முரணான ஒரு விடயமாகும்.

கல்வி அமைச்சு ஒரு அறிவித்தலையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்னுமொரு அறிவித்தலை வெளியிட்டு முரண்பட்ட சூழ்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இது இந்த அரசாங்கத்தின் கல்வி சார்ந்த நிலையற்ற ஒரு கொள்கையை சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக எல்லா மாணவர்களும் இந்த விண்ணப்பத்தினை செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்படலாம்.

அத்தோடு இந்த விண்ணப்பங்கள் யாவும் இணையவழியில் ஊடாகவே மேற்கொள்ள வேண்டி இருப்பதனால் இந்த நிலைமை மேலும் சிரமமாகும்.

பாடசாலைகள் எப்போது ஆரம்பிக்கப்பட போகின்றது என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் பாடசாலை அதிபர்கள் உடைய ஆலோசனைகளை கூட மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.

இவற்றை கருத்தில் கொண்டு குறித்த பல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லையை நீடிக்குமாறு நான் இந்த அரசாங்கத்தை மாணவர்கள் பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.