https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/29/original/knn.jpg

தமிழக உணவுத்துறை அமைச்சருக்கு கே.என். நேரு சவால்

by

திருச்சி: திமுக மீது உணவுத்துறை அமைச்சர் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அக் கட்சியின் முதன்மைச் செயலர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், திருச்சியில் இரண்டாம் கட்டமாக பெற்றப்பட்ட 22, 538 மனுக்களை இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம்  திமுகவின் முதன்மை செயலர் கே.என்.நேரு ஒப்படைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் திமுக எம்எல்ஏகள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஒரு லட்சம் குடும்பத்தினருக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கனிகள் வழங்கப்பட்டுள்னது.  

கரோனா வேகமாக பரவுகிறது, சட்டப்பேரவை கூட்டத்தொடரை விரைந்து முடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியபோது முதல்வர் கிண்டல் செய்தார். அதே சமயம் மத்திய அரசு எச்சரித்தவுடன் அவசர அவசரமாக கூட்டத்தொடரை முடித்தனர்.

நாங்கள் பெற்ற மனுக்கள் எல்லாம் மோசடி என அமைச்சர் காமராஜ் கூறுகிறார். எங்களுக்கு பெறப்பட்ட மனுக்கள் குறித்து நாங்கள் நிருபிக்க தயாராக இருக்கிறோம். நாள் இடம் குறித்து அமைச்சர் தான் சொல்ல வேண்டும். எங்கள் தலைவர் நிருபிக்க தயாராக இருக்கிறார்.  

தமிழகத்தில் உணவு பிரச்னை இல்லை என்று அரசு கூறி வருகிறது. அப்படி இல்லை என்றால் எதற்காக இவ்வளவு மனுக்கள் திமுகவிடம் குவிகிறது. எங்களது ஹெல்ப் லைனுக்கு போன் வந்ததா? இல்லையா? என தெரிந்து கொள்வது அரசுக்கு சுலபம். என்றாலும் அதனை நிருபிக்க தயாராக இருக்கிறோம். கரோனாவை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சியான நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம். தேர்தல் வந்தால் ஸ்டாலின்தான் முதல்வராவார். யாராலும் தடுக்க முடியாது என்று நேரு கூறினார். 

பேட்டியின்போது திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, எம்எல்ஏ-க்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.