பொருத்தமில்லாத துறைகளில் இராணுவத்தினர்

by

இராணுவத்தினருக்கு பொருத்தமில்லா துறைகளில் அவர்களை ஈடுப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அவப்பெயரை பெற்றுக் கொடுக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக் ரணவக்க, தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கு பொருத்தமற்ற துறைகளில் அவர்களை ஈடுப்படுத்தி சமூகத்தின் முன்னிலையில் அவர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் பெரும் பங்காற்றி வருகின்ற சுகாதார பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகள் தடைச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் அவர்களும் ஆர்பாட்டங்களில் ஈடுப்படுவதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று கோரோனா வைரஸின் பரவால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மத்தியகிழக்கு, குவைத், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலர் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் உண்மைத்தகவலை வெளிவிவகார அமைச்சர் தூதரங்கங்களுடன் தொடர்பு கொண்டாவது தெரியப்படுத்த வேண்டும். இந்த வெளிநாட்டு ஊழியர்களை ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மிக ஆர்வமுடன் அழைத்து வந்த இவர்கள் தற்போது தாமதித்திருப்பதற்கான காரணம் என்ன ?

இலங்கையில் எவருக்குமே வைரஸ் தொற்று ஏற்படாத நிலையில் விமான நிலையத்தை மூடிவைக்காமல் அதனை திறந்து வைத்திருந்தமையின் காரணமாகவே வைரஸ் பரவல் ஏற்பட்டதுடன், மக்களும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்தமை தொடர்பில் அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். அரசாங்கத்தின் கீழ் மட்டத்திலான அரசியல் இலாபம் கருதிய செயற்பாடுகளினால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதுடன், சிறைக்குச் செல்லவேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனது குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவே வெளிநாடுகளில் சென்று பணிபுரிய தேவை ஏற்பட்டுள்ளது. இவர்களே அரச வருமானத்திற்கு நேரடியாகவே பங்காற்றுபவர்கள்.

இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். என்றார்.

மேலும், எமது காலத்தில் இராணுவத்தினருக்கு உரிய மரியாதையை வழங்கி வந்தோம். ராஜபக்ஷக்களின் கடந்த கால ஆட்சியில் இராணுவத்தினருக்கு பொருத்தமற்ற விடயம் தொடர்பில் பொறுப்பளித்த போது அவர்களுக்கு கொலையாளி என்ற பட்டமே வழங்கப்பட்டது.

தற்போது சுகாதார பிரிவுக்கு வழங்க வேண்டிய பொறுப்புகளை இராணுவத்தினருக்கு கொடுத்ததனால், வைரஸ் தொற்றுக்கு பலர் உள்ளாகியிருப்பதுடன், பலரது விமர்சனங்களுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் ஆர்பாட்டங்களில் ஈடுப்படுவதற்கும் உரிமை இல்லை. அதனால் அவர்களுக்கு ஆதரவாக நாமே முன்னிற்க வேண்டும். அரசாங்கத்தின் திட்டமற்ற செயற்பாடுகளினால் பாதிப்படைந்துள்ள சுகாதார பிரிவு மற்றும் இராணுவத்தினர் அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்வரவேண்டும் என்றார்.