https://img.maalaimalar.com/Articles/2020/May/202005290912371098_Tamil_News_Coronavirus-cases-rises-to-165-lakh-in-India_SECVPF.gif

புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 7466 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா வைரசால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 165799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

https://img.maalaimalar.com/InlineImage/202005290912371098_1_coronavirus-test._L_styvpf.jpg

இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 175 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71106 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 3414 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 59546 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 19372 பேருக்கும், குஜராத்தில் 15562 பேருக்கும், டெல்லியில் 16281 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Coronavirus | கொரோனா வைரஸ் | கொரோனா உயிரிழப்பு