https://img.maalaimalar.com/Articles/2020/May/202005291454489435_Tamil_News_CMDA-Says-no-chance-by-opening-koyambedu-Market_SECVPF.gif

கோயம்பேடு உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை- சிஎம்டிஏ

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என்று சிஎம்டிஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

சென்னை:

கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 24 ம் தேதி முதல் 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்து, கொரோனா தொற்று பரவியதால் மே 5 ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

https://img.maalaimalar.com/InlineImage/202005291454489435_1_koyambedu2._L_styvpf.jpg

சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், சில விற்பனையாளர்களால் உணவு தானிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ. மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சி.எம்.டி.ஏ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.

அப்போது இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள்  கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம் எனவும் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Tags :

Koyambedu Market | Coronavirus | Madras HC | கோயம்பேடு மார்க்கெட் | கொரோனா வைரஸ் | சென்னை ஐகோர்ட்