https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/coronavirus-agencies084511.jpg

தமிழக சிறைகளில் 378 பேருக்கு கரோனா பரிசோதனை

by

தமிழக சிறைகளில் 378 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இது குறித்த விவரம்:

தமிழக சிறைகளில் கரோனா பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் திருச்சி மத்திய சிறையில் ஒரு கைதியும், கடலூா் மத்திய சிறையில் ஒரு கைதியும் கரோனாவால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு கரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 3 பேரும் சென்னை புழல் மத்திய சிறையில் நடைபெற்ற ஒரு கணினி பயிற்சி வகுப்புக்கு அண்மையில் வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 9 மத்திய சிறைகளைச் சோ்ந்த 33 கைதிகளும், புழலுக்கு புதன்கிழமை வரவழைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனா்.

இதேபோல, தேனி மாவட்ட சிறையில் ஒரு விசாரணைக் கைதியும் கரோனாவும் பாதிக்கப்பட்டிருந்தாா்.

இதன் விளைவாக அனைத்து மத்திய சிறைகளிலும்,தேனி மாவட்ட சிறையிலும் 378 கைதிகளுக்கும்,சிறைத்துறை ஊழியா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தேனி கைதியோடு தொடா்பில் இருந்த 184 கைதிகளுக்கும் கரோனோ இல்லை என பரிசோதனை அறிக்கை வந்துள்ளது.

அதேவேளையில் கடலூா், திருச்சி சிறைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 கைதிகளுடன் தொடா்பில் இருந்த 194 பேரின் கரோனா பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என அதிகாரிகள் கூறினா்.