தொண்டமானின் மறைவு அதிர்ச்சியளிக்கின்றது - சி.வி.விக்னேஸ்வரன்

by

ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். புதிய இந்திய தூதுவரை சந்தித்து சில மணித்தியாலங்களில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தொண்டமான் பல தடவைகள் என்னைக் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் வந்து சந்திப்பார்.

அவர் என்னை அரசியல்வாதி என்ற ரீதியில் சந்திப்பதை விட தனது பாட்டனாரின் நண்பர் என்ற முறையிலேயே வந்து பலமுறை சந்தித்ததுண்டு.

செளமியமூரத்தி தொண்டமான் கொழும்பில் என் வீட்டுக்கு அருகாமையில் றோயல் கல்லூரிக்கு முன்புறத்தில் தான் அந்தக் காலங்களில் குடியிருந்தார்.

அவரை ஒருமுறை நானும் வேறு சிலரும் சந்தித்த போது தனக்குப் பின் யார் என்று அவர் அங்கலாய்த்ததை நாம் கண்டோம்.

மகன் இராமநாதன் நல்லவர் என்றும் ஆனால் அவரால் தனது பதவியின் சுமையைத் தூக்க முடியுமா, தாங்க முடியுமா? என்று உரக்கக் கேட்டார்.

அப்போது தான் அவரின் பேரன் தொண்டமானை உள் கொண்டு வருவது பற்றிப் பேசப்பட்டது.

தொண்டமான் தகுந்த வாரிசு எனவும் அவர் வயதில் குறைந்தவராக இருந்தாலும் காலா காலத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்றும் அங்குள்ளவர்களால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

சில காலங்களில் தொண்டமான் தனது பணியை ஏற்றார். காலக்கிரமத்தில் அவர் தம் பணியை உணர்ந்து மலையக மக்களுக்கு ஒரு வலுவான தலைவராகத் திகழ்ந்தார்.

பாட்டனாரின் வழியில் அவர் அவர்களை திறம்பட வழி நடத்தி வந்து சடுதியாக எம்மைவிட்டுப் பிரிந்தமை மலையக மக்களுக்கும் எமக்கும் மிகுந்த துயரையும் துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மலையக மக்களின் தலைமைத்துவத்தில் ஒரு பாரிய இடைவெளி தெரிகின்றது.

தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஒரு சவாலான கால கட்டமான இத்தருணத்தில் தொண்டமானின் மறைவு ஒரு பேரதிர்ச்சியாக உணரப்படுகிறது.

அவரின் வெற்றிடம் விரைவில் தக்கவரால் நிரப்பப்பட வேண்டும். ஒருவர் சடுதியாக வானுலகு ஏகுவது புண்ணியம் என்று கூறுவார்கள்.

அந்த விதத்தில் தொண்டமான் நீண்டகால சுகயீனத்தையோ துன்பத்தையோ எதிர் நோக்காமல் சென்றமை ஒரு புண்ணியம் என்றே கொள்ள வேண்டும்.

தொண்டமான் குடும்பத்தினருக்கு எனது உளமார்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முக்கியமாகத் தம்பி செந்தில் தொண்டமானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்’. – என்றுள்ளது.