https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547318.jpg

தமிழகத்தில் தொழில் துவங்க 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்

5

சென்னை : பல்வேறு நாடுகளை சேர்ந்த, 17 தொழில் நிறுவனங்கள், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தொழில்கள் துவங்க, நேற்று முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கனரக வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்து பொருட்கள் உற்பத்தி என, பல்வேறு துறைகளில், 17 புதிய தொழில் திட்டங்கள், தமிழகத்தில் துவக்கப்பட உள்ளன.இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலர், சண்முகம், தொழில் துறை முதன்மை செயலர், முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒப்பந்தங்கள் விபரம்:

* காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம், 'சிப்காட்' தொழிற்பூங்காவில், 2,277 கோடி ரூபாய் முதலீட்டில், 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், ஜெர்மனி நிறுவனத்தின், கனரக வாகனங்கள் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது.

* ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, நோக்கியா தொலைதொடர்பு, சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 1,300 கோடி ரூபாய் முதலீட்டில், 10 ஆயிரம் பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், பின்லாந்து நிறுவனத்தின், மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு விரிவாக்க திட்டம் துவங்கப்படுகிறது.

* ஒரகடம், சிப்காட் தொழிற்பூங்காவில், 900 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்கப்படும், ஜப்பான் நிறுவனத்தின், 'செமிகண்டக்டர் சிப்ஸ்' உற்பத்தி திட்டத்தில், 600 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்
.

* தைவான் நிறுவனம் மற்றும் அஸ்டன் ஷூஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில், 350 கோடி ரூபாயில், காலணிகள் உற்பத்தி திட்டத்தில், 25 ஆயிரம் பேர், வேலைவாய்ப்பு பெறுவர்
.

* காஞ்சிபுரம் மாவட்டம், மப்பேடில், 400 கோடி ரூபாய் முதலீட்டில், 5,800 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், ஆஸ்திரேலியா நிறுவனத்தின் தொழிற்பூங்கா அமைக்கப்படுகிறது.

*பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 150 கோடி ரூபாய் முதலீட்டில், 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், தென்கொரியா நிறுவனத்தின், 'காஸ்டிங் பெசிலிட்டி' திட்டம் வருகிறது.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, மஹிந்திரா தொழிற்பூங்காவில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், நெதர்லாந்து நிறுவனத்தின், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது.

* திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், 3,000 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், 'சென்னை பவர் ஜெனரேஷன்' நிறுவனத்தின், 750 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்படுகிறது
.

* திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் செய்யாறு தொழிற்பூங்காவில், 18 கோடி ரூபாய் முதலீட்டில், 30 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், பிரான்ஸ் நிறுவனத்தின், உறுப்புகள் பதப்படுத்தும் ரசாயனம் உற்பத்தி திட்டம் ஏற்படுத்தப்படுகிறது.

* துாத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், 600 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், பிரான்ஸ் நிறுவனத்தின், காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்க திட்டம் அமைக்கப்படுகிறது
* சென்னை, அம்பத்துாரில், 2,800 கோடி ரூபாய் முதலீட்டில், 200 பேருக்கு வேலை அளிக்கும், அமெரிக்க நிறுவனத்தின் தகவல் மையம் அமைக்கப்படுகிறது
..

* சென்னையில், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில், 200 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், சிங்கப்பூர் நிறுவனத்தின், தகவல் மையம் அமைக்கப்படுகிறது
.

* சென்னையில், 210 கோடி ரூபாயில், 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், ஜெர்மனி நிறுவனத்தின், காற்றாலை உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது
.

* ஸ்ரீபெரும்புதுார் தொழிற்பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், 130 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், சீனா நிறுவனத்தின், மின்சார வாகன உற்பத்தி திட்டம் அமைகிறது
,

* திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், 46 கோடி ரூபாய் முதலீட்டில், 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், தைவான் நிறுவனத்தின், துல்லிய கூறுகள் உற்பத்தி திட்டம் வருகிறது.

* காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 15 கோடி ரூபாய் முதலீட்டில், 20 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும், ஜப்பான் நிறுவனத்தின், 'சீலிங் மெட்டிரியல்' உற்பத்தி ஆலை அமைக்கப்படுகிறது
.

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 12 கோடி ரூபாயில், 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், அமெரிக்கா நிறுவனத்தின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் துவங்கப்படுகிறது.
இவற்றில், ஒன்பது ஒப்பந்தங்கள் நேரடியாகவும், பிற ஒப்பந்தங்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாகவும் மேற்கொள்ளப்பட்டன.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE