https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/kid.jpg

தாய் இறந்தது தெரியாமல் எழுப்பும் குழந்தை! மனதை கனக்கச் செய்யும் விடியோ

by

முசாபர்பூர் ரயில் நிலையத்தில் தாய் இறந்தது தெரியாமல் அவரை எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் விடியோ பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது. 

நாட்டில் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உடைமைகளுடன் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்களது நீண்ட, கடினமான பயணத்தில் சில துயரச் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. 

அதில் ஒன்றாக, ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த தாயை எழுப்பும் குழந்தையின் விடியோ மனதை கனக்கச் செய்கிறது. 

ஆமதாபாத்தில் இருந்து கதிஹார் செல்லும் சிறப்பு ரயில் முசாபர்பூர் அருகே செல்லும்போது, ரயிலில் அந்த பெண் இறந்துள்ளார். இதையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு, ஆம்புலன்சில் அனுப்புவதற்காக முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. 

அப்போது, அவரது உடல் ஒரு துணியால் மூடப்பட்டிருந்த நிலையில் அவரது மகன், தனது தாய் தூங்கிக் கொண்டிருப்பதாக கருதி துணியைப் பிடித்து இழுத்து எழுந்திருக்கச் சொல்லியிருக்கிறான். இந்த காட்சி அங்கிருப்பவர்களை கண்கலங்கச் செய்துள்ளது. 

பசி காரணமாக அவர் உயிரிழந்தார் என்று கூறப்படும் நிலையில், முசாபர்பூர் மாவட்ட நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மூன்று நாட்களாக பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தற்போது நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உறவினர்களில் ஒருவர், கடும் பசி மற்றும் வெயில் காரணமாகவே அவர் இறந்துவிட்டதாக கூறுகிறார். 

குழந்தை அம்மாவை எழுப்பும் அந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு ஆழ்ந்த அனுதாபத்தை பெற்று வருகிறது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட இதுபோன்ற உயிரிழப்புகள் மனதில் அதிக தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன.