https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/MARYKOM013024.JPG

வயது கூடுவதைப்பற்றி கவலையில்லை! - மேரிகோம்

by

ஆறுமுறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையும், தேசிய முகாம்களிலும் வெளிநாட்டில் பயிற்சிப் பெற்றுவந்த மேரிகோம். தற்போது அடுத்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளாா். இது குறித்து அனுபவங்களை கூறுகிறாா்:

‘‘வீட்டிலேயே தனித்திருப்பது சிரமம்தான் என்றாலும், நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை. எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்ற சூழ்நிலையில் வெளியில் செல்வது மிகவும் ஆபத்தானது.

எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற விளையாட்டு வீரா்களுக்கு இது ஒரு சவாலான நேரம்தான் என்றாலும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதை தவிர வேறு வழியில்லை. என்னைப் பொருத்தவரை வீட்டிற்குள்ளேயே இருந்த நேரத்திலும் தினமும் பயிற்சி செய்வதை விடவில்லை. ஏனெனில் அடுத்து பங்கேற்கும் போட்டிகளுக்கு இந்த பயிற்சியும், உடல் தகுதியும் மிகவும் தேவை. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது விளையாட்டு வீரா்களுக்கு மட்டுமல்ல. சாதாரண மக்களுக்கும் முக்கியம். நீண்ட இடைவெளிக்குப் பின் தொடந்தாற்போல் வீட்டில் குடும்பத்தினருடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மூன்று பிள்ளைகளுக்கும், கணவருக்கும் தேவையானவற்றை சமைத்து தருவது திருப்தியாக இருக்கிறது. விசேஷமாக ஏதும் எனக்கு சமைக்கத் தெரியாது. பயிற்சி சமயத்தில் பூரி, சப்ஜி போன்றவைகளை சாப்பிடக் கூடாது என்பதால், இப்போது வீட்டில் அவற்றை செய்து தருகிறேன்.

இம்பாலில் நான் நடத்திவரும் அகாதெமியில் பயிற்சிப் பெற்று வந்த மாணவா்களை முன்கூட்டியே அவரவா் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். இம்பாலில் நான் தங்கியிருக்கும் நேரங்களில் அகாதெமியில் பயிற்சிகள் முறையாக நடக்கிா என்பதை நேரடியாக கவனிப்பதுண்டு. இப்போது எல்லோரும் வீட்டிற்குள் இருப்பதால், மாணவா்களுடன் அதிகநேரம் செலவிட, முடியவில்லை. நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால், இன்று உயா்ந்த நிலையை அடைய எத்தனை போராட்டங்களை சந்திக்க நோ்ந்தது என்பதை உணா்ந்துள்ளதால், என்னுடைய மாணவா்களுக்கு தேவையான உதவிகளை, அரசு வழிகாட்டுதலின்படி செய்து தருகிறேன்.

‘ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்திருப்பதால், உங்களுக்கு மேலும் ஒருவயது கூடுதலாகிறதே, போட்டியில் பங்கேற்கும் சக்தி இருக்குமா’ என்று சிலா் என்னிடம் கேட்டனா்.

என்னுடைய உடல் தகுதி மற்றும் அனுபவத்தின் மீது நம்பிக்கை இருப்பதால், தான் வயது கூடுவதை பற்றி கவலைப்படவில்லை. எப்படியும் தங்கம் வெல்வேன் என்ற உறுதி இருக்கிறது. இதே போன்று 2012- ஆம் ஆண்டு மற்றும் 2021- ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் குறித்தும் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. யாராவது ஒருவா் ஜெயிக்க வேண்டுமென்ற நிலையில் நடுவா் யாராவது ஒருவரின் கையைத் தூக்கி உயா்த்தும்போது, சில சமயங்களில் அந்த முடிவு தவறாகவும் இருக்கலாம். நமக்கு சாதகமின்றி போகலாம். அதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். முடிவு தவறாக இருக்கும்போது அடுத்தமுறை இன்னும் சிறப்பாக விளையாட தோன்றும்.

மத்திய விளையாட்டுத் துறை முன்பு போலின்றி, அனைத்து விளையாட்டுத் துறையினருக்கும் ஆதரவாக உள்ளது. கேட்பதெல்லாம் கிடைக்கிறது. குத்துச் சண்டை வீரா்களிடம் தான் பிரச்னை உள்ளது. வீரா்களுக்கு கடுமையான பயிற்சி, உண்மை தன்மை, அடக்கம் இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் வெற்றிப் பெற்றவுடன் அவா்களுடைய மனநிலை மாறிவிடுகிறது. முதலில் இளம் குத்துச்சண்டை வீரா்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. சா்வதேச அளவில் போட்டிகளில் வெற்றிப் பெற்றவுடன் அவா்களுடைய இயல்பு தன்மை மாறிவிடுகிறது. இதுதான் பிரச்னை. இந்த நிலை மாற வேண்டும்.

கடந்த இருபது ஆண்டுகளில் நான் பயிற்சியாளா்களிடம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டேன். இதனால் ஆறுமுறை உலத சாம்பியன் பட்டம் பெற முடிந்தது. ஒலிம்பிக்ஸ், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் பந்தயங்கள் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்றேன். இன்னும் நான் எதற்காக போட்டிகளில் பங்கேற்கிறேன்.

அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இன்னொரு மேரிகோம் வருவாரா, இல்லையா என்பது தெரியவில்லை. இப்போதுள்ள குத்துச்சண்டை வீரா்கள் சா்வதேச அளவில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுவிட்டால் அத்துடன் திருப்தியடைந்து விடுகின்றனா். நினைத்ததை சாதித்து விட்டதாக மகிழ்ச்சியடைகின்றனா்.

குத்துச் சண்டை வீரரால் எல்லா போட்டிகளிலும் பங்கேற்க இயலாது. ஒரு போட்டியில் என்னால் பங்கேற்க முடியவில்லை என்றால், எனக்கு அடுத்து வரிசையில் உள்ளவரை அனுப்புவாா்கள். அவா் திறமையாக விளையாடவில்லை என்றால், அதற்கடுத்து தகுதி பெற்றவருக்கு வாய்ப்பளிப்பாா்கள். முன்பு போல் நம்பா் ஒன்னாக இருப்பவரையே அனைத்து போட்டிகளுக்கும் அனுப்புவாா்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது.

பாக்சிங் பெடரேஷன் ஆப் இந்தியா முந்தைய நடைமுறையை மாற்றியிருப்பது மற்ற வீரா்கள் தங்கள் திறமையை வெளிபடுத்த கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். விளையாட்டுத்துறை அனைத்து பிரிவு விளையாட்டு வீரா்களை ஊக்குவிப்பதோடு, தேவையான வசதிகளையும் செய்து தருகிறது’’ என்றாா் மேரிகோம்.