https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/migrant_workers.jpg

காஞ்சிபுரத்திலிருந்து 4,637 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

by

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4,367 பேர் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா பேட்டி. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4367 பேர் சிறப்பு ரயிலில் பிகார், ஒரிசா போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 15 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதைத் தொடர்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களைத் தவிர 127 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பு ஏற்பட்டு இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1798 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர் இவர்களில் ஆயிரத்து 630 பேருக்கு தனிமை காலம் முடிந்துவிட்டது. தற்போது ஆயிரத்து 668 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 656 தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும் பணிக்கு வரும்போது அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தொழிற்சாலைக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

நோக்கியா தொழிற்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 பேரும் மற்ற மாவட்டங்களிலும் சேர்த்து நோக்கியா தொழிற்சாலையில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஹூண்டாய் கார் கம்பெனியில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தொழிற்சாலைகளில் மொத்தம் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பா. பொன்னையா தெரிவித்தார்