கோழிப்பண்ணையில் கோழிகளை திருடி வந்த சகோதரர்கள் சம்மாந்துறையில் கைது

by

கோழிப்பண்ணை ஒன்றில் ஒரு மாதகாலமாக கோழிகளை திருடி வந்த சகோதரர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்மாந்துறை ஹயர் பள்ளி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கோழிப்பண்ணையில் தொடர்ச்சியாக கோழிகள் களவாடப்பட்டு வருவதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிநடத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் பொலிஸ் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்றையதினம் வீரமுனை பகுதியை சேர்ந்த சுமார் 15 மற்றும் 18 வயதினை உடைய சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரினால் களவாடப்பட்ட கோழிகள் சிலவற்றை விற்பனை செய்த நபர்களிடம் அடையாளம் காட்டியதற்கமைய அவை மீட்கப்பட்டுள்ளன.

மேலும் ரூபா 15 ஆயிரம் பெறுமதியான கோழிகள் இவர்களால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களில் ஒருவர் 15 வயதிற்கு குறைவாக உள்ளமையினால் அவரை இன்றைய தினம் நன்னடத்தை உத்தியோகத்தரின் உதவியுடன் சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.