வெலிசரை கடற்படை முகாமில் இருந்த படையினர் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில்

by

வெலிசரை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சுமார் நான்காயிரம் கடற்படையினர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரும் நேற்றைய தினத்துடன் முப்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது கண்டறியப்பட்ட பின்னர் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ள 61 கடற்படையினர் மாத்திரம் வெலிசரை கடற்படை முகாம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய அனைவரும் முகாமில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், வெலிசரை கடற்படை முகாமில் உள்ள கெமுனு, மஹசேன், தக்ஷிலா ஆகிய முகாம்கள் முற்றாக கிருமி தொற்று நீக்கப்பட்டதும், வேறு முகாம்களில் உள்ள கடற்படையினர் கடமைக்காக அழைக்கப்பட உளள்தாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

விடுமுறைக்கு சென்று மீண்டும் அழைக்கப்பட்ட சுமார் 8 ஆயிரம் படையினரை முகாம்களுக்கு அனுப்பி வைக்காது தற்காலிக முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்து, PCR பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் முகாம்களுக்கு அழைப்பிக்க உள்ளதாகவும் சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.