https://s3.amazonaws.com/adaderanatamil/1590554894-airlines-flight-2.jpg

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கை

தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவர விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய (27) தினம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்த வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை எதிர்வரும் ஜூன் மாதத்தில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமானது.

இதற்கமைய சீனாவில் சிக்கியிருந்த 33 இலங்கையர்கள் பெப்ரவரி முதலாம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இரண்டாவதாக வழிபாடுகளுக்காக இந்தியா சென்றிருந்த 839 பேர் மார்ச் 19 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த மே 25 ஆம் திகதி 20 நாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதேவேளை கட்டாரில் இருந்து 268 பேர் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 5 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.