வெளிநாடு ஒன்றில் இலங்கையர் பலருக்கு கொரோனா தொற்று - 4 பெண்கள் மரணம்

by

குவைத் நாட்டில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக குவைத் இலங்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டு பர்வானியா, அஹமதி, ஹவாலி, ஜஹரா மற்றும் குவைத் சிட்டி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் இலங்கையர்கள் பாரியளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவர்களில் நான்கு இலங்கை பெண்கள் உயிரிழந்துள்ளதாக குறித்த ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நிஷாந்த சன்ஜீவ மடபாத தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக அங்கு தங்கியிருக்கும் இலங்கையர்களுக்குள், வாகன சாரதியாக செயற்படுபவர்களே அதிகமாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகும் வெளிநாட்டவர்களுக்கு குவைத் அரசாங்கத்தினால் கவனிப்புகள் கிடைப்பதில்லை எனவும் குறைந்தபட்சம் நோயாளிகளுக்கு மருந்து உட்பட வழங்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவர்களுக்கு எவ்வித பரிசோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.