அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அங்கஜன்

by

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு தொடர்பில் இரங்கல் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

1964ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் திகதி பிறந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆன ஆறுமுகன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார்.

கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர். கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக இற்றை வரை இருந்தார்.

ஆறுமுகன் தொண்டமான் 1990ம் ஆண்டு இ.தொ.காவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ஆண்டு பொதுச் செயலாளராகவும் பதவியேற்றார்.

முதற் தடவையாக 1994 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

அதன் பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

தோட்ட உட்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் என்னுடன் சேர்ந்து யாழ். மாவட்ட மக்களுக்காக பல வீட்டுத்திட்டங்களையும் மலையக வாழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கான பல உதவி திட்டங்களையும் செய்தார்.

கடந்த பெப்ரவரி 21ம் திகதி யாழ். வருகை தந்தபோதும் தெல்லிப்பளை பிரதேச செயலக பகுதியில் வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். யாழ். மக்களுக்காக வீட்டுத் திட்டங்களை தொடர்ந்து தருவதாக உறுதியளித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.