https://img.dailythanthi.com/Articles/2020/May/202005272030247011_Coronavirus-Lockdown-Likely-to-be-Extended-Till-June-15_SECVPF.gif

நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்

நாடு தழுவிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22-ந்தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த மக்கள் ஊரடங்கு சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதே மாதத்தில் 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து பிறப்பிக்கப்பட்ட 31-ந்தேதி வரையிலான 4 கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனாலும் கொரோனா ஆட்டம் நின்றபாடில்லை.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு தற்போதும் வேகமாக பரவி வருவதால் 5வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்றுநோய்களின் ஹாட்ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் கடுமையான நெறிமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளும் மேலும் சில தளர்வுகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.  குறிப்பாக, திருமண சடங்குகள் மற்றும் பண்டிகைகளுக்கான கூட்டங்களை தீர்மானிக்கும் முடிவு மாநில அரசுகளுக்கே இருக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பில் 70 சதவீத பாதிப்புகளை கொண்ட 11 நகரங்களில் மட்டும் மே 31ம் தேதிக்குப்பிறகு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கோல்கட்டா, ஆமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய 11  முக்கிய நகரங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும். மற்ற நகரங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து வரும் 31ம் தேதி(ஞாயிறு) 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என கூறப்படுகிறது.