https://img.dailythanthi.com/Articles/2020/May/202005270320178888_Coronal-impact-in-India-rises-to-145380-Death-toll-rises_SECVPF.gif

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,45,380 ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 4,167 ஆனது

இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,45,380 ஆகவும், பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22-ந்தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த மக்கள் ஊரடங்கு சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதே மாதத்தில் 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து பிறப்பிக்கப்பட்ட 31-ந்தேதி வரையிலான 4 கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனாலும் கொரோனா ஆட்டம் நின்றபாடில்லை.குறிப்பாக தொடர்ந்து 5 நாட்களாக 6 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 6,977 பேருக்கு ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவர பட்டியல், புதிதாக கொரோனா தொற்றால் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காட்டுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,45,380 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 146 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையும் 4,167 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து 60,491 பேர் குணமடைந்துள்ளதாகவும், 80,722 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில் உயிரிழந்த 146 பேரில், 60 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள். குஜராத்தில் 30 பேரையும், டெல்லியில் 15 பேரையும், மத்தியபிரதேசத்தில் 10 பேரையும், தமிழகத்தில் 7 பேரையும், மேற்குவங்காளத்தில் 6 பேரையும், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 4 பேரையும், தெலுங்கானாவில் 3 பேரையும், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடகாவில் தலா 2 பேரையும், கேரளாவில் ஒருவரையும் ஒரே நாளில் கொரோனா பலி வாங்கி இருக்கிறது.இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-மராட்டியம்- பாதிப்பு 52,667 (பலி 1,695), தமிழ்நாடு-17,728 (127), குஜராத்-14,460 (888), டெல்லி-14,053 (276), ராஜஸ்தான்-7,300 (167), மத்தியபிரதேசம்-6,859 (300), உத்தரபிரதேசம்-6,532 (165), மேற்குவங்காளம்-3,816 (278), ஆந்திரா-3,110 (56), பீகார்-2,730 (13), கர்நாடகா-2,182 (44), பஞ்சாப்-2,060 (40), தெலுங்கானா-1,920 (56), ஜம்மு-காஷ்மீர்-1,668 (23), ஒடிசா-1,438 (7), அரியானா-1,184 (16), கேரளா-896 (5), அசாம்-526 (4), ஜார்கண்ட்-377 (4), உத்தரகாண்ட்-349 (3), சத்தீஸ்கார்-291, சண்டிகார்-238 (3), இமாசலபிரதேசம்-223 (5), திரிபுரா-194, கோவா-67, லடாக்-52, புதுச்சேரி-41, மணிப்பூர்-39, அந்தமான் நிகோபார் தீவு-33, மேகாலயா-14 (1), நாகாலாந்து-3, அருணாசலபிரதேசம்-2, தத்ராநகர் ஹவேலி-2, மிசோரம்-1, சிக்கிம்-1.