https://img.dailythanthi.com/Articles/2020/May/202005271838379209_CBSE-has-decided-that-students-who-went-back-to-their-homes_SECVPF.gif

10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு: மத்திய மனித வள அமைச்சகம் அறிவிப்பு

10 மற்றும்12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம் என மத்திய மனித வள அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை. சில பகுதிகளில் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே அந்த பகுதிகளிலும் மற்றும் மீதம் உள்ள பாடங்களுக்கும் வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரம் மையங்களில் தேர்வு நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், மாணவர்களின் பயண தூரத்தை குறைக்கும் வகையிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 15 ஆயிரம் மையங்களில் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று அறிவித்தார். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படமாட்டாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்  10 மற்றும்12 ஆம் வகுப்பு  சிபிஎஸ்இ  மாணவர்கள்  தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம் என மத்திய மனித வள அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 வெளியூர் சென்றிருந்தால் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறியிருந்தாலும் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.