https://d13m78zjix4z2t.cloudfront.net/tn_27.png

தமிழகத்தில் கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து அமைப்பினர் போராட்டம்!

by

ஊரடங்கின் காரணமாக பூட்டப்பட்ட கோயில்களை திறக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. 

ஊரடங்கின் காரணமாக கோயில்கள் பூட்டப்பட்ட நிலையில், வழிபாட்டிற்காக கோயில்களை திறக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் ஈஸ்வரன் கோயில் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் தோப்புக் கரணம் போட்டும் சூடம் ஏற்றியும் வழிபாடு நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள் கோவில் முன்பாக இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற இந்து முன்னணியினர் மதுக்கடைகளை மட்டும் திறக்கும் தமிழக அரசு கோயில்களை திறக்க வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சோழீஸ்வரர் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களின் முன்பு சூடம் ஏற்றியும். தேங்காய் உடைத்தும் சிறப்பு வழிபாடு செய்து போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் பங்கேற்றனர்.