https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/9/12/original/SNAKE.jpg

பாம்பைக் கடிக்கவிட்டு கேரளப் பெண் கொலை; 2-வது முறை கடிக்க விட்டதில் சிக்கிய கணவர்

by

கேரளத்தில் பாம்பைக் கடிக்கவிட்டு மனைவியைக் கொன்ற கணவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் ஏற்கெனவே ஒரு முறை பாம்புக் கடித்துத் தப்பிய இளம்பெண், இரண்டாவது முறையாகவும் பாம்பு கடித்ததால் இறந்தார். பெண்ணைப் பாம்பு கடிக்கச் செய்ததற்குக் காரணம் கணவனே  என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாம்பு கடித்து தனது மகள் உயிரிழந்த சம்பவத்தில் ஏதோ சந்தேகம் இருப்பதாக, மகளின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியைக் கணவரே பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய வழக்கை விசாரித்த காவல்துறையினர் கூறுகையில், 25 வயது உத்ரா கொலை வழக்கில் பெண்ணின் கணவர், பாம்பாட்டி மற்றும் ஒரு கூட்டாளி என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில், பாம்பு கடித்து இந்தப் பெண் மரணம் அடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரில், அப்பெண் ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த நிலையில், மீண்டும் பாம்பு கடித்து மரணம் அடைந்திருப்பது, அவரது கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, உயிரிழந்த உத்ராவின் சகோதரர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறி, கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தவரான உத்ராவின் கணவர் சூரஜ்தான், ரூ.10 ஆயிரம் கொடுத்து பாம்பாட்டியிடம் இருந்து பாம்பை வாங்கி வந்து உத்ராவைக் கடிக்கவிட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது. முதல் முறை  வீட்டுக்குள் பாம்பை விட்டு உத்ராவைக் கடிக்க வைத்தபோது அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தப்பித்துவிட்டார். மீண்டும் அதே பாணியில் முயன்று உத்ராவைக் கொலை செய்துள்ளார் சூரஜ்.

குளிர்சாதன வசதி கொண்ட அறையில் அவ்வளவு பெரிய விஷப் பாம்பு வந்து தனது மகளை  மட்டும் எப்படி கடித்துள்ளது என்பதே எங்கள் கேள்வியாக இருந்தது. இதற்கிடையே, எங்களது மருமகன், அப்பகுதியில் உள்ள பாம்பாட்டிகள் சிலருடன் பழக்கம் வைத்திருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக உத்ராவின் பெற்றோர் கூறுகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான உத்ரா - சூரஜ் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத் தக்கது.