https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/EY2AB96UMAASQtN.jpg

ஊரடங்கு தளர்வினால் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது: கேஜரிவால்

by

ஊரடங்கு தளர்வினால் தில்லியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இன்று காணொலி மூலமாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.  பாதிப்பு அதிகரித்தாலும் தில்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. தொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெரும்பாலான வழக்குகளில் லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. அவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 3,314 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று வரை 13,418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,540 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 6,617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 261 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா சிகிச்சைக்காக இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் 2,000 புதிய படுக்கைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்தார்.