அதிகரித்து வரும் எலி காய்ச்சல் - கண்டியில் இரண்டு பேர் உயிரிழப்பு

by

எலி காயச்சல் ஏற்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 பேரில் 12 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எலி காய்ச்சல் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்கள் இளைஞர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

எலி காய்ச்சலில் பாதிக்கப்படும் நபர்களை சிகிச்சையளிப்பதன் மூலம் 80 வீதமானோரை குணப்படுத்தலாம். நோய் அறிகுறிகள் தென்பட்டும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பதன்மூலமே உயிரிழப்புகள் அதிகரிக்கும்.

எலி காய்ச்சலை ஏற்படுத்தும் பக்டீரியா உடலுக்குள் சென்று இரண்டு நாட்களில் இருந்து 14 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். முதல் வாரத்தில், குளிர்க்காய்ச்சல், நடுக்கம், தலைவலி, உடல் வலி, உடல் தளர்வு, கண்கள் சிவந்துபோதல், கண் கூச்சம், வயிற்று வலி, வாந்தி, உடலில் தடிப்புகள் போன்றவை ஏற்படும்.

பொதுவாக, பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு நோயின் தீவிரம் குறைவாக இருக்கும். அதன் பின்னர் சுமார் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை காய்ச்சல் இல்லாமல் இருக்கும். இரண்டாவது கட்டத்தில், கிருமிகள் பல்வேறு திசுக்களையும் உடல் உறுப்புகளையும் தாக்குவதால் பாதிப்பு ஏற்படும். சுமார் 4 முதல் 30 நாட்கள் வரை நோயின் அறிகுறிகள் நீடிக்கும். கல்லீரலும், சிறு நீர் நிறம் மாறுதல், சிறுநீரகமும் அதிகமாகப் பாதிக்கப்படும்.

இலங்கையில் எலி காய்ச்சல் நோயாளிகள் அதிகளவில் இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றனர். இரண்டாவதாக காலி மாவட்டத்தில் அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் ஏனைய மாவட்டங்களிலும் தற்போது எலி காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.