https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/12/original/balbir1xx.jpg

இந்தியாவின் மகத்தான ஹாக்கி வீரர் பல்பீர் சிங் சீனியர் காலமானார்!

by

ஹாக்கி முன்னாள் வீரர் பல்பீர் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 96.

உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார் பல்பீர் சிங் சீனியர். கடந்த மே 8 அன்று மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு மேலும் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் பல்பீர் சிங்கின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இத்தகவலை அவருடைய பேரன் கபிர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி அணி 1948, 1952, 1956 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றபோது அந்த அணியில் இடம்பெற்றிருந்தார் பல்பீர் சிங் சீனியர். 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்ஸில் இவர் தலைமையில்தான் இந்திய அணி தங்கம் வென்றது. ஒலிம்பிக்ஸ் ஹாக்கி இறுதிப் போட்டியில் அதிக கோலடித்தவர் என்கிற சாதனை பல்பீர் வசமே உள்ளது. 1952-ல் நெதர்லாந்து அணிக்கு எதிராக இறுதிச்சுற்றில் இந்திய அணியின் 6-1 வெற்றியில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் பல்பீர். 1975 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றபோது பல்பீர் தலைமைப் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இருந்தார். 1957-ல் பத்மஸ்ரீ விருது பல்பீர் சிங்குக்கு அளிக்கப்பட்டது.

பல்பீர் சிங் சீனியரின் மறைவுக்கு விளையாட்டு வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.