தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யும் நிலை கூட ஏற்படும்! முன்னாள் எம்.பி சிறீதரன்

by

கடந்த முறை பெற்ற ஆசனத்தை விட எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எங்களுக்கு வழமையாக மக்களிடம் இருக்கின்ற ஆதரவு குறையவில்லை. பதவியைப் பிடிக்கவேண்டும் என்ற அரசியல் எங்களுக்கு இல்லை.

நாங்கள் எமது மக்கள் தருகின்ற ஆணையின் பிரகாரம் மக்களுக்காக எங்களால் முடிந்த கோரிக்கைகளை மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடிய வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

இதிலே தவறான பாதைகளும் உள்ளன. இதில் தீர்மானிக்கக்கூடிய சக்தி மக்கள் தான். இவ்வளவு காலமும் என்ன அடிப்படையில் நடந்து கொண்டோம், தேசிய விடுதலை என்பதை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகள, என்னென்ன வழிகள் ஊடாக அதனை பெற்றுக்கொள்ள முடியும் என்ற ரீதியில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நமது தமிழ் மக்களுக்கு புரியும்.

எனவே தமிழ் மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எம்மை பலமான ஒரு அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என்று நம்பிக்கை எமக்குள்ளது.

நாங்கள் கட்டாயமாக கடந்த முறை பெற்ற ஆசனங்களை விட அதிகளவு ஆசனங்களை எடுக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்.

குறிப்பாக நமது பெரும்பான்மையினை இந்த நாடாளுமன்றத்தில் காட்டாது விட்டால் இந்த அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள் பற்றி மக்கள் அனைவரும் அறிந்ததே.

இந்த ஜனாதிபதியானவர் இராணுவ ஆட்சிக்கு இந்த நாட்டினை கொண்டு வந்துள்ளார். எனவே தேர்தலிலும் அவருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமோ கிடைக்கவில்லையோ எனினும் அவரது செயற்பாடுகள் முழுவதும் இராணுவ மயமாக்கலாகவே இருக்கும்.

சிலவேளைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூட தடை செய்யக் கூடிய நிலை கூட ஏற்படும்.

எனவே இந்த ஜனநாயகமற்ற செயற்பாடுகளை எதிர்கொள்வதாக இருந்தால் நாம் ஒரு பலமான சக்தியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தால் எதுவும் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எமது தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இந்த நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும்பான்மை முக்கியமானது என்பது எனது கருத்தாகும் என தெரிவித்துள்ளார்.