ஊரடங்கு சட்டம் நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் அரச, தனியார்துறை பணியாளர்களுக்கு விசேட அறிவிப்பு

by

கடந்த மே 11ஆம் திகதி அரச மற்றும் தனியார்த்துறை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்ட சுகாதார ஒழுங்குவிதிகள், நாளை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி பபா பலிஹவர்த்தன இது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அரச மற்றும் தனியார்துறை பணியாளர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததை போன்று நாளை கடமைகளுக்கு சமூகமளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அலுவலங்களுக்கு பிரவேசிக்கும் முன்னர் கைகளை கழுவுதல், போக்குவரத்தின்போதும் அலுவலகத்திலும் சமூக இடைவெளிகளை பின்பற்றுதல் நடவடிக்கைகளை அவசியமாக முன்னெடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

அரசாங்கம் ஊரடங்குச்சட்டத்தை தளர்த்துவதை காரணம் காட்டி பொதுமக்கள் சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களை குறைத்துவிடக் கூடாது.

இது மீண்டும் கொரோனா பரவலுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என்று பபா பலிஹவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.