https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/vihari81818.jpg

தொடக்க வீரராகக் களமிறங்குவாரா?: பயிற்சி ஆட்டத்தில் சதமடித்த விஹாரி பதில்!

by

இந்தியத் தொடக்க வீரராக விஹாரி மீண்டும் களமிறங்குவாரா என்கிற கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

நியூஸிலாந்து லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. முதல் டெஸ்டில் இடம்பெறக்கூடிய பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடியபோதும் விஹாரி, புஜாரா தவிர அனைவரும் சொதப்பினார்கள். பிரித்வி ஷா, ஷுப்மன் கில் ஆகிய இருவரும் டக் அவுட் ஆனார்கள். மயங்க் அகர்வால் 1 ரன் மட்டுமே எடுத்தார். விஹாரி 101 ரன்களும் புஜாரா 92 ரன்களும் எடுத்து இந்திய அணியின் கெளரவத்தைக் காப்பாற்றினார்கள். நான்கு இந்திய பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள்.

இந்நிலையில் இந்தச் சதத்துக்குப் பிறகு, முதல் டெஸ்டில் ஹனுமா விஹாரி தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு அவர் பதில் அளித்ததாவது:

ஒரு வீரராக எங்கு வேண்டுமானாலும் விளையாட நான் தயாராக உள்ளேன். தொடக்க வீரராக நான் விளையாடுவது குறித்து இதுவரை எனக்குத் தகவல் எதுவும் இல்லை. நான் எந்த நிலையில் விளையாட வேண்டும் என்று அணி விரும்புகிறதோ அதைச் செய்ய நான் தயாராகவே உள்ளேன். 

பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் தான் டெஸ்ட் ஆட்டத்தில் பயன்படுத்தப்படும். ஏனெனில் நியூஸிலாந்து அணியின் பலம், வேகப்பந்துவீச்சு தான். எனவே அதிகப் புற்கள் கொண்ட ஆடுகளம் தான் அமையப்போகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!