கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

கல்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (14) கரை ஒதுக்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மடு கடற்கரையில் இன்று காலை மீனவர்கள் வருகை தந்து பார்த்த சமயம் இனந்தெரியாத 55 - 60 க்கு இடைப்பட்ட வயதினையுடை வயோதிப பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது.

சடலத்தினை பார்வையிட்ட மீனவர்கள் கிராம அதிகாரிக்கு தெரியப்படுத்தியதன் பிரகாரம் கல்குடா பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணின் சடலம் வேறு பகுதியில் இருந்து கல்மடு கடற்கரைக்கு அலைகள் மூலம் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும், குறித்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் கல்குடா பொலிஸாருடன் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கிராம அதிகாரி க. கிருஷ்னகாந்த் தெவித்தார்.

இனந்தெரியாத வயோதிப பெண்ணின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்-