திடீர் நோய் நிலைமை காரணமாக 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திடீரென ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கந்தகெடிய, கந்தகெபுஉல்பத வித்தியாலயத்தின் 15 மாணவர்கள் இன்று (14) காலை கந்தகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாட்களாக மூடப்பட்டிருந்த பாடசாலையின் வகுப்பறை ஒன்றை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது மாணவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்பளங்கள் ஏற்பட தொடங்கியதன் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 மாணவர்களும் மற்றும் 3 மாணவிகளும் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி காமினி மத்துமகே அவர்களை தொடர்பு கொண்டு வினவியதில், மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.