வுஹானில் இருந்து வந்த மாணவர்கள் தியதலாவை இராணுவ முகாமில் இருந்து வௌியேறினர்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியதலாவ இராணுவ முகாமின் விசேட மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களும் அங்கிருந்து இராணுவ தலைமையகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் இராணுவத்தினரால் குறித்த மாணவர்கள் இராணுவ தலைமையகம் நோக்கி விசேட பஸ்ஸில் அனுப்பி வைக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்கள் அகுரேகொட, இராணுவ தலைமையகத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், அங்கு இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வாவை சந்தித்த பின்னர் தமது வீடுகளை நோக்கி செல்லவுள்ளனர்.

கொவிட் - 19 வைரஸ் தொற்று ஆரம்பமான சீனாவின் வுஹான் நகரில் தங்கி கல்வி கற்றுவந்த குறித்த 33 இலங்கை மாணவர்களும் இம்மாதம் முதலாம் திகதி விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அதன் பின்னர், தியதலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.