ஐக்கிய தேசிய கட்சியில் தற்போது பிரச்சினை தலைவர் பதவிக்கு அல்ல! பொதுச்செயலாளர் பதவிக்கே

by

ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சண்டையில் உண்மையான பிரச்சினை கட்சியின் பொதுச் செயலாளராக யார் இருக்க வேண்டும் என்பதேயாகும் என கட்டுரையாசிரியர் பி.கே.பாலச்சந்திரன் அவரது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பொதுச் செயலாளர் பதவி கட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறைவேற்று அந்தஸ்து பதவியாகும். கட்சியின் எந்தவொரு தீர்மானத்தையும் உத்தியோகபூர்வமானதாக்குவதற்கு பொதுச் செயலாளர் கைசாத்திட வேண்டியிருக்கும்.

குறிப்பாக தேர்தல் ஆணைக்குழுவுடனும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்துடனுமான அலுவல்களில் அந்தப் பதவி கூடுதல் முக்கியமானது.

எனவே ஒரு கட்சியின் தலைவர் அல்லது தவிசாளர் எப்போதும் பொதுச் செயலாளராகத் தங்களுக்கு நெருக்கமான மிகவும் நம்பிக்கையான சகாவையே பொதுச் செயலாளராக நியமிக்கிறார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாச பிரிவு தலைவர் ரணில் விக்கிரசிங்கவின் விசுவாசியான அகிலவிராஜ் காரியவசம் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சஜித் விசுவாசியான ரஞ்சித் மத்தும பண்டார அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.

ஆனால், தலைவர் விக்கிரமசிங்க காரியவசத்தை கைவிடப் போவதில்லை. ஏனென்றால் கட்சி மீதான தனது பிடியை பேணிப் பாதுகாப்பதற்கு அவருக்கு காரியவசம் தேவைப்படுகிறார்.

ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தான் இருக்கப் போவதில்லை என்றும் அந்தத் தேர்தலில் போட்டியிடவும் கூடப் போவதில்லை என்றும் விக்கிரமசிங்க சஜித்திடம் கூறிவிட்ட போதிலும் இவையெல்லாம் கணிசமான சலுகைகள் அல்ல என்று சஜித் பிரிவு நம்புகிறது.

விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தைக் கையளிப்பது அல்லது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து காரியவசத்தை நீக்கி அவருக்கு பதிலாக மத்தும பண்டாரவை நியமிப்பதே உண்மையான சலுகையாக இருக்கும்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக மத்தும பண்டார இருப்பதற்கு விக்கிரமசிங்க இணங்கியிருக்கிறார். ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக பண்டார வருவதை அவர் அனுமதிக்கப் போவதில்லை.

தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒரு தற்காலிக கூட்டணியே ஐக்கிய தேசிய முன்னணி என்பதை விக்கிரமசிங்க அறிவார்.

இந்த முன்னணி எந்த நேரத்திலும் கலைக்கப்படக்கூடும் அல்லது அதன் அங்கத்துவக் கட்சிகள் எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்பதும் விக்கிரமசிங்கவுக்குத் தெரியும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து நீடிக்கும்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு 2024 வரை விக்கிரமசிங்க தலைவராக இருப்பதை அனுமதிக்கும் என்பதைத் தெரிந்து கொண்ட சஜித் பிரிவு தலைவர் பதவியிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டுமென்று கோருவதை நிறுத்தி விட்டது.

பதிலாக பொதுச்செயலாளர் காரியவசத்தை பல்வேறு வழிகளினூடாக விலக்குவதற்கு அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்கிரமசிங்கவை அடி பணிய வைப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து தனியாகப் போகவிருப்பதாக சஜித் பிரிவு பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தல் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணிக்கு புதிய பெயரையும் புதிய தேர்தல் சின்னத்தையும் கொடுப்பதற்கான முயற்சிகளினூடாக இந்த பிரிந்து போகும் அச்சுறுத்தல் வெளிப்படுத்தப்படுகிறது.

அவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணிக்கு புதிய பெயரையும் புதிய சின்னத்தையும் கொடுப்பதென்பது உண்மையிலேயே புதிய கட்சியொன்றை அமைப்பதற்கு ஒப்பானதாக இருக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தலைமையிலான சஜித் ஆதரவு குழு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமான் ஸ்ரீ ரத்நாயக்காவை சந்தித்து ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் புதிய பெயர் 'எமது தேசிய முன்னணியாக (அபே ஜாதிக பெரமுன)" இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இந்த பெரமுன தேர்தல் ஆணைக்குழுவினால் தொலைபேசி சின்னத்துடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாகும்.

பிறகு அந்தப் பெயரை 'சமகி ஜாதிக பலவேகய" என்று மாற்றியிருப்பதாகவும் சஜித் அதன் தலைவராகவும் ரஞ்சித் மத்தும பண்டார அதன் பொதுச்செயலாளராகவும் இருப்பார்கள் என்றும் சின்னம் இதயமாக இருக்கும் என்றும் சஜித் பிரிவு கூறியது.

பெயரை மாற்றுவதற்கு இணங்கிய தேர்தல் ஆணையாளர் நாயகம் சின்னத்தை தொலைபேசியில் இருந்து இதய வடிவிலானதாக மாற்றுவது பற்றி குறிப்பிடுகையில் தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சின்னங்களில் இதய சின்னம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு வேண்டுகோளொன்று விடுக்கப்படுமானால் இந்த சின்னப் பிரச்சினையை வெற்றி கொள்ள முடியும்.

ஆனால், விக்கிரமசிங்க கட்சியின் சட்ட ஆலோசகரை மேற்கோள் காட்டி தற்போதைய யானை சின்னத்தைத் தவிர வேறு எந்தவொரு சின்னத்தின் கீழும் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிட முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதன் அர்த்தம் ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலை வேறுபட்ட பெயருடனும் சின்னத்துடனும் கூடிய முற்றிலும் புதிய ஒரு அமைப்பாக அல்லாமல் ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான ஒரு கூட்டணியாகவே போட்டியிடும் என்பதே ஆகும்.

ஆனால், விக்கிரமசிங்க நெருக்குதல்களுக்கு அடிபணிவார் என்று சஜித் பிரிவு நம்பிக்கையுடன் இருக்கிறது. ஏனென்றால், விக்கிரமசிங்கவின் குழு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியதாக இருக்கிறது.

இந்தக் கோரிக்கைகள் சகலதையும் ஆராய்வதற்கு விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு இந்த மாற்றங்களை ஆதரிக்குமென்றும் இன்று வெள்ளிக்கிழமை கட்சியின் செயற்குழு கூடும் போது விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பார் என்றும் சஜித் குழு எதிர்பார்க்கிறது.

ஆனால், விக்கிரமசிங்க குழு விட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை. சஜித் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார் என்று அந்தக்குழு நம்புகிறது. பிரிந்து செல்வதற்கான திராணி அவரிடம் இல்லை என்பது விக்கிரமசிங்க தரப்பின் எண்ணம்.

மேலும், பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தோதல்வியே கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்ற நிலையில் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கி அதற்கு தலைமை தாங்கும் வல்லமை சஜித்திடம் இல்லை.

அவ்வாறு அமைக்கப்படக்கூடிய புதிய கட்சி, நேராக நிறுத்தி வைக்கப்பட்ட சீட்டுக்கூட்டம் ஒவ்வொன்றாக சரிந்து விழுவது போன்று விழுந்துவிடும்.

அதன் உறுப்பினர்களில் சிலர் மீண்டும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்குத் திரும்பி வருவர். வேறுசிலர் ராஜபக்சக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தாவி விடுவர்.

இந்த மதிப்பீட்டை விளக்கிக்கூறிய விக்கிரமசிங்கவின் விசுவாசியொருவர் பின்வருமாறு கூறினார்.சஜித்திற்கு ஏதாவது தலைமைத்துவ ஆற்றல் இருந்திருக்குமாயின் பல வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவராக இருந்தபோது அவர் அதை வெளிக்காட்டியிருப்பார்.

ஐக்கிய தேசிய கட்சி மீதான அவரது செல்வாக்குப்படி அவர் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கூட சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

அந்த மாவட்டத்தில் தனது சொந்தத் தொகுதியில் வெற்றி பெற அவரால் இயலாமல் போயிருக்கிறது. இப்போது அவர் கொழும்பிலுள்ள தனது தந்தையார் காலஞ்சென்ற பிரேமதாசாவின் தொகுதிக்கு மாறுவது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.