https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/WhatsApp_Image_2020-01-31_at_4.jpeg

திருப்பூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.2 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கும் அபாயம்

by

திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 2 நாள்களில் ரூ.2 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாள்கள் வேலை என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளி, சனிக்கிழமைகளில் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்திருந்தன. 

இதன்படி திருப்பூர், ரயில் நிலையம் முன்பாக உள்ள ஆந்திரா வங்கி அருகே வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழுவின் மாவட்ட பொறுப்பாளர் டி.மனோகரன் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 353 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர் முதல் மேலாளர் வரையில் உள்ள 5,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் கோடி என இரு நாள்களில் ரூ.2 ஆயிரம் கோடி பணப் பரிவர்த்தனை பாதிக்கும். மேலும், மாவட்டத்தில் உள்ள 650 ஏடிஎம்களிலும் சேவை பாதிக்கும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு உறுப்பினர்கள் விஜய் ஆனந்த், மகாதேவன், பெலிக்ஸ் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், ரவி பாபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!