https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/31/original/senthilbalaji.jpg
செந்தில் பாலாஜி

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!

by

சென்னை: தனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.  

அதிமுகவில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக 16 பேரிடம் ரூ.95 லட்சம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் இருந்தது. இந்த மோசடி தொடர்பாக அம்பத்தூர் கணேஷ்குமார் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இந்த சமயத்தில் சென்னையிலிருந்து டிஎஸ்பி தலைமையில் ஆய்வாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட போலீஸார், கரூரை அடுத்த மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரம்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ணபுறத்திலுள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு மற்றும் கடை உள்ளிட்ட மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் கரூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்நிலையில் தனது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.  

இரண்டு நாட்கள் நீதிமன்றம் விடுமுறை என்பதால் இதனை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க வேண்டும் என்பதால், வழக்குப் பட்டியலில் சேர்க்க நீதிபதி சேஷாசாயி முன்னிலையில் செந்தில் பாலாஜி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை நீதிபதி ஏற்றுக் கொண்டதால் மாலை நான்கு மணிக்கு மேல் தயாரிக்கப்படும் பட்டியலில் இந்த வழக்கு சேர்க்கப்பட்டது. பின்னர் அது திங்கள் காலை விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

செந்தில் பாலாஜி முன்ஜாமீன்மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படும் அபாயம் உள்ளதாகவே தெரிகிறது.      

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!