https://s3.amazonaws.com/adaderanatamil/1580471872-suicide-2.jpg

பொலிஸ் சுற்றிவளைப்பில் தற்கொலை செய்துக் கொண்ட நபர்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரொருவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்ற போது குறித்த சந்தேகநபர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக இபலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் தற்போது மரதன்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை இபலோகம பொலிஸார், போதைப்பொருள் மற்றும் திருட்டு சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 35 வயதுடைய குறித்த நபரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது வீட்டினுள் இருந்த சந்தேகநபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இபலோகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.