11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கலா?

by

2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பில் வசித்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

கப்பம் பெறும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவங்களின் பின்னணியில் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரணாகொட மற்றும் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தஸநாயக்க ஆகியோர் உட்பட்ட 13பேர் தொடர்பு கொண்டிருப்பதாக கூறி அவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் இந்த குற்றங்கள் அரசியல் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்று கூறி பிரதிவாதிகளான கரணாகொட மற்றும் தசநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்; முறைப்பாட்டை செய்திருந்தனர்.

இதனையடுத்து அந்த ஆணைக்குழுவும் பிரதிவாதிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான வழக்கு விசாரணையை தமது ஆணைக்குழுவின் விசாரணை முடியும் வரை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருககு ஆலோசனை வழங்கியிருந்தது.

எனினும் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தமது பணிகளில் தலையிடும் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றுகூறி சட்டமா அதிபர் ஆணைக்குழுவின் ஆலோசனையை நிராகரித்திருந்தார்.

இதனையடுத்தே ஆணைக்குழு மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல உத்தேசித்துள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனை ரட்ணம் வீதியைச் சேர்ந்த கஸ்தூரி ஆராச்சிலாகே ஜோன் ரெய்ட், கொழும்பு 12- ரவி நாகாநந்தன்( செப்டம்பர் 2008), வாசல வீதியின் பிரதீப் விஸ்வநாதன்( செப் 2008), தெட்டக்கொடையை சேர்ந்த மொஹமட் சஜித், புலுமென்டால் வீடமைப்பு திட்டத்தை சேர்ந்த திலக்கேஸ்வரம் ராமலிங்கம், கொழும்பு 13இன் ஜமால்தீன் திலான்( செப் 2008)மன்னார் அரிப்பு -அமலீன் லியோன், மன்னார் அரிப்பு- ரொசான் லியோன் ( ஆகஸ்ட் 2008), கொட்டாஞ்சேனை ரட்ணம் வீதியின் அந்தனி கஸ்தூரிஆராச்சி( ஒக்டோபர்2008) திருகோணமலை லிங்கநகர் கனாராஜா ஜெகன், தெஹிவளை கரகம்பிட்டிய மொஹமட் அலி( மார்ச் 2009) ஆகியோரே கடத்தப்பட்டவர்களாவர்.