http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_29_Jan_806865870952607.jpg

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: தடுக்கும் வழிமுறைகளை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு

பீஜிங்: உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தம், சுகாதாரம் தொடர்பாக பொதுவான அறிவுரைகளை பொதுமக்களுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகள்:

* இருமல், சளியை சிந்திய பிறகு சோப் அல்லது கிருமி நாசினியை கொண்டு குழாய் நீரில் கைகளை கழுவ வேண்டும்.

* சளியுடன் கூடிய இருமல் ஏற்பட்டால் துணியால் வாய், மூக்கை மூட வேண்டும். அந்த துணியை மூடிய குப்பை தொட்டியில் போட வேண்டும். 

* காய்ச்சல், இருமல் உடையவர்களிடம் நெருக்கமாக பழகுவதை தவிர்க்க வேண்டும்.

* பொது இடங்களில் கண்டிப்பாக எச்சில் துப்ப கூடாது.

* காய்ச்சலுடன் இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

* கால்நடை சந்தைக்கு சென்றால், அங்குள்ள விலங்குகளை நேரடியாக தொடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* வேக வைக்காத அல்லது முழுமையாக வேகாத இறைச்சியை சாப்பிட கூடாது.

* பால், இறைச்சி போன்ற உணவு பொருளை கையாளும்  போது உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* உணவு தயாரிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும், கைகள் அழுக்காக காணப்பட்டாலும் உடனே கைகளை கழுவ வேண்டும்.

* கழிவறை சென்று வந்ததும் சோப் அல்லது கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம்.

இத்தகைய வழிமுறைகள் அனைத்தும் பின்பற்றினால் உலகை ஆட்டிப்படைக்கும் கொரானா வைரஸை தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.