https://s3.amazonaws.com/adaderanatamil/1580451326-jaffna-2.jpg

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை புறக்கணித்த கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத்தனர்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாரர்ளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று (21) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.எனினும் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

இதே வேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஐயகலா மகேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

மேலும், முன்னர் அமைச்சராக இருந்த காலங்களில் கூட்டத்தை தலைமை தாங்கிய நடாத்திய ஈபிடிபியின் செயலாளர் நாயகம் ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஐன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

எனினும் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொள்ளவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-