அரைசொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய நடவடிக்கை! பயணிகளின் பணத்தை சுரண்டுவதாக குற்றச்சாட்டு

by

அரை சொகுசு (SEMI LUXURY)பஸ் சேவையை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பஸ் சேவையின் மூலம் பயணிகளுக்கு எந்தவித வசதிகளும் கிடைப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சுமார் பத்தாயிரம் பயணிகளை பயன்படுத்தி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் நூறு சதவீதமான பயணிகளும், அரை சொகுசு பஸ் சேவையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெரியவந்துள்ளது.

பல வருடங்களாக செயல்பட்டு வரும் அரை சொகுசு பஸ் சேவையில், பயணிகளுக்கு எந்த வசதிகளும் வழங்காமலும், பணத்தை சுரண்டுவதுமே அதிகளவில் காணப்படுகிறது. இதனையடுத்து அந்த சேவையை இரத்து செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பஸ் வண்டிகளில் ஒலிபரப்படும் பாடல்களினால் ஏற்படும் இரைச்சலை கட்டுப்படுத்த தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அரை செகுசு பஸ் சேவை என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையிடும் குறித்த சேவை குறுகிய காலத்துக்குள் முழுமையாக இரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.