https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/12/9/original/Amit_Shah_lok_Sabha.jpg

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல: அமித் ஷா

by

புது தில்லி: தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, எந்த மதத்தினருக்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எந்த மதத்தினருக்கும், சிறுபான்மையினருக்கும் 0.001 சதவீத அளவு கூட எதிரானது அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த மசோதாவின் மூலம் மத ரீதியிலான பாகுபாடுகள் களையப்படும். மசோதா மூலம் 1.75 கோடி மக்கள் பயனடைவார்கள். இந்த சட்டத் திருத்த மசோதா தொடர்பாக எம்பிக்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார் என்று கூறினார்.

60 ஆண்டுகள் பழமையான குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கோரும் இந்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார். அதைத் தொடந்து மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கடும் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது விவாதம் நடந்து வருகிறது.

இந்த மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. எனவே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா தாக்கல் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 293 எம்பிக்கள் ஆதரவும், 82 எம்பிக்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து மத ரீதியிலான அடக்குமுறைகளைத் தொடா்ந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தச் சட்டத்தில், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!