https://s3.amazonaws.com/adaderanatamil/1575865453-CID-2.jpg

சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் நேற்று மாலை (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவருடன் சுவிஸ் தூதரக உத்தியோகத்தர் மற்றும் இரண்டு சட்டத்தரணிகளும் வருகை தந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

அதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விடயங்களை முன்வைத்தனர்.

அதனை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்றைய தினத்திற்குள் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்திற்கு அறிவித்திருந்தார்.

அதற்கமையவே கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடதக்கது.