https://s3.amazonaws.com/adaderanatamil/1575023802-death-02.jpg

மனைவி தாக்கியதில் முன்னாள் போராளி பலி

குடும்ப தகராறு காரணமான கணவன் மீது மனைவி தேங்காய் திருவும் திருவலைக் கட்டையால் தாக்கியதில் கணவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (28) இரவு மட்டக்களப்பு, கிரான் கோரக்களிமடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் மனைவியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான், கோரக்களிமடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான 49 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான பிள்ளையான் பாலசுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று இரவு 10.30 மணியளவில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி திருவலைக்கட்டையினால் கணவன் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்டார் என சந்தேகத்தில் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-