http://img.dinakaran.com/data1/DNewsimages/Dkn_Tamil_News_2019_Nov25__507793605327607.jpg

இரண்டாவது நாளாக இறந்த குட்டி யானையை நெருங்க விடாத தாய் யானையின் பாசப்போராட்டம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி நாயக்கன்சோலை சுப்ரமணியர் கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று இறந்துள்ளது. இதையறிந்த சேரம்பாடி வனத்துறையினர் இறந்த குட்டி யானையை கயிற்றில் கட்டி இழுத்து சாலையோரத்தில் வைத்துள்ளனர்.  அப்போது இதனை கண்டு ஆத்திரமடைந்த தாய் யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக விரட்டி தாக்க முயன்றது. இதனால் வனத்துறை மற்றும் பொதுமக்கள் ஓட்டம் பிடித்து தப்பியுள்ளனர். மேலும் தாய் யானை அப்பகுதியில் இருந்த வனத்துறை வாகனங்கள், பைக்குகள் மற்றும் கோயிலை உடைத்து சேதப்படுத்தியது.

இதையறிந்த சேரம்பாடி போலீசார், சம்பவம் இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாயக்கன்சோலை பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் இறந்த குட்டி யானை அருகே வனத்துறையினரை நெருங்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி சாலையில் நின்றபடி உள்ளது. நாயக்கன்சோலை கிராம மக்கள் மாற்று சாலையை பயன்படுத்தி சேரம்பாடி மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். சேரம்பாடி வனத்துறையினர் யானை இருக்கும் இடத்தை சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்த குட்டியானையை நெருங்கவிடாமல் தாய் யானையின் பாசப்போராட்டத்தால் நாயக்கன்சோலை பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.